Tamil Sanjikai

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 47). மதுரை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவருக்கு பாலவசந்தி என்ற மனைவியும், நாகசுமித்ரா, நாகஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரி, பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் நாகராஜ் வசித்து வந்தார். நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டுக்கு வந்த நாகராஜ் சீருடையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த அவரது மனைவி பாலவசந்தி, நாகராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பாலவசந்தி, அக்கம்பக்கத்தினரிடம் தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்து உள்ளார். அவர்கள் நாகராஜின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியபோதும் திறக்கப்படவில்லை.

இதனையடுத்து அவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில், நாகராஜ் தூக்கில் தொங்கியநிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் தலைமை காவலராக இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? உயர் அதிகாரி யாரும் அவருக்கு நெருக்கடி கொடுத்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment