Tamil Sanjikai

கர்நாடகாவின் மாண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள காவிரியாற்றில் ஒசூரை சேர்ந்த காதல் திருமணம் செய்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. சூடுகொண்டப்பள்ளியில் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த நந்திஷ்-சுவாதி காதல் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். காதலர்களை கொன்று விட்டு கை,கால்களை கட்டி காவிரியில் வீசியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா மகன் நந்தீஷ் ஓசூரில் உள்ள தனியார் ஹார்டுவேர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுவாதி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி சூளகிரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் 10-ஆம் தேதி 2 பேரும் திடீரென மாயமானார்கள். இந்த நிலையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மண்டியா அருகே சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து பெளகாவாடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டு 2 பேரின் கை, கால்களை கட்டி பிணங்களை காவிரி ஆற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.
இந்த ஆணவ கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை சீனிவாசன், சித்தப்பா வெங்கடேசன், சகோதரர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

0 Comments

Write A Comment