திருச்சியில் காவல்துறையினர் லாரியை துரத்தியதால் தாறுமாறாக ஓடிய லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 32). இவர் பொன்னகரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கார்த்திகேயன் இன்று தனது இரு சக்கர வாகனத்தில், தென்னூர் கோஹினூர் தியேட்டர் சிக்னல் அருகே இடது புறம் திரும்பினார், அப்போது அங்கு காவல்துறையினர் லாரி ஒன்றை விரட்டி பிடிக்க முயன்றனர், அவர்களிடம் தப்பிக்க லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனத்தை முந்திச் சென்றார். அப்போது லாரியின் டயர்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் கார்த்திகேயன் .
இந்த விபத்திற்கு முழுப்பொறுப்பு காவல்துறையினர் மட்டுமே. இது விபத்தல்ல காவல்துறையினரால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
இதுகுறித்து தகவலறிந்த தில்லைநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு, லாரி ஓட்டுனர் தர்மபுரியை சேர்ந்த பெருமாள் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments