Tamil Sanjikai

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் பூண்டி அருகே உள்ள கீழ்மடைப் பள்ளம் நீர்த்தேக்கத்தில் கஜா புயலின்போது உடைப்பு ஏற்பட்டது. சீறிப் பாய்ந்த வெள்ளம் விளைநிலங்களில் பயிர்களை அடித்துச் சென்றுவிட விவசாயம் நடந்த தடயமே இல்லாமல் அழிந்து போயுள்ளது. புயல் ஓய்ந்த 3 நாட்களுக்கு பின்பே இந்த பகுதி மக்களின் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடைந்து போன நீர்த்தேக்கத்தை சீரமைக்க அதிகாரிகளை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இதே போல் தாண்டிக்குடியில் புயலும், மழையும் தாண்டவமாடியுள்ளது. அவரை, காபி, பீன்ஸ், பட்டாணி என அனைத்தையும் வெள்ளம் கொண்டுபோய் விட்டது. பயிர்கள் செழித்திருந்த இடம் இப்போது வெறும் தரையாக காட்சி அளிக்கிறது.

தாண்டிக்குடி அருகே மலைப்பகுதியில் வசித்த பழங்குடியினரின் வீடுகளும் புயலுக்கு தப்பவில்லை. வீடுகளோடு உடைமைகளும் பறிபோக குழந்தைகளோடு செய்வதறியாமல் காமனூர் ஊராட்சி சேவை மைய அலுவகத்தில் குடியேறிவிட்டார்கள். கடந்த 5 நாட்களாக வசிக்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானல் புயலால் களை இழந்து நிற்கிறது. கொடைக்கானலை புரட்டிப்போட்ட கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேல்மலை கிராமங்களில் மின் வினியோகம் இன்னும் சீராகவில்லை.

கஜா புயலின் போது கன மழை கொட்டி தீர்த்ததில் பூண்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்மடை பள்ளம் ஏரிக்கரை நிரம்பியது. இதனால் கடந்த 2 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. நேற்று மேலும் மழை பெய்யத் தொடங்கியதால் ஏரியின் மதகுகள் உடைந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இதனால் அப்பகுதியில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைகிழங்கு, பூண்டு, பீன்ஸ் ஆகிய பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின.

ஏற்கனவே அறுவடை செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு பல லட்சம் நஷ்டம் ஆகியது. தற்போது மீதி இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். ஏரியில் இருந்து தண்ணீர் அதிக அளவு வெளியேறியதால் பொதுமக்களே ஒன்றுதிரண்டு அப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 150 அடி நீளம், 30 அடி அகலம், 19 அடி உயரம் உடைய கீழ்மடை பள்ளம் ஏரியில் தேக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது.

இதனால் தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் விவசாயிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த ஏரியின் கரையை கான்கிரீட் சுவரால் நிரந்தரமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Write A Comment