Tamil Sanjikai

முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா, யாக சாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர். விழா நாட்களில் விரதம் இருப்பதற்காக கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கம், மண்டபங்கள், விடுதிகளில் பக்தர்கள் தங்கி உள்ளனர். விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் 9 இடங்களில் இரும்பு தகடாலான தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. கிரிப்பிரகாரத்தை சுற்றிலும் இரும்பு தகடாலான தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.

1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். பின்னர் யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும், சண்முகவிலாச மண்டபத்தை சேர்கிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்.

6-ம் திருநாளான வருகிற 13-ம் தேதி மாலை 4.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. 7-ம் திருநாளான 14-ம் தேதி இரவு 11 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 8-ம் திருநாளான 15-ம் தேதி இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டின பிரவேசம் நடைபெறும். 9-ம் திருநாளான 16-ம் தேதி முதல் 11-ம் திருநாளான 18-ம் தேதி வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 12-ம் திருநாளான 19-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

0 Comments

Write A Comment