Tamil Sanjikai

தமிழகம் முழுவதும் பொது இடங்களில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் விதிகளை மீறி சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர் வைப்பதை தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஏற்கெனவே பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, கருணாநிதி சிலை திறப்பு விழா, நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவின்போது விதிகளை மீறி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டன. இதுகுறித்து டிராபிக் ராமாசாமி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சியினர் விதிகளை மீறி வைக்கும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியாற்றலாம் என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இவ்வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பார்த்த பின்னர் நீதிபதிகள், ''கடந்த 2006-ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து அதிகாரிகள் ஒரே மாதிரியான பதிலைத்தான் கூறி வருகின்றனர். எனவே, பொது இடங்களில் மக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக சாலையோர நடைபாதையில் எந்த பேனரும் வைக்கக்கூடாது.

பொது இடங்களில் பேனர் வைக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பேனர் வைக்கப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

0 Comments

Write A Comment