Tamil Sanjikai

கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்த மருத்துவக்கழிவுகள் அகற்றம் தொடர்பாக அறிக்கை தர நெல்லை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க துணைத்தலைவர் சிதம்பரம் ஐகோர்ட் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், நெல்லை மாவட்டம் புளியங்குடி, சொக்கம்பட்டி கிராமங்களில் கொட்டி வருகின்றனர். மருத்துவக்கழிவுகளை இப்பகுதியில் கொட்டுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது.

மருத்துவ கழிவுகளில், மனிதர்கள் அல்லது விலங்குகளின் நோய் தடுப்பு உபகரணங்கள், மருத்துவ ஆராய்ச்சி பொருட்கள், பரிசோதனை பொருள்கள், மனித உடற்கூறியல் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உடல் பாகங்கள், கால்நடைகளில் இருந்து ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட விலங்கு கழிவுகள், மைக்ரோபையாலஜி மற்றும் பயோடெக்னாலஜி கழிவுகள், ஊசிகள், மருத்துவ கண்ணாடி பொருட்கள் ஆகியவற்றை முறையாக மருத்துவ விதிகளை பயன்படுத்தி அழிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் திறந்தவெளியில் எங்கள் கிராமத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்குகிறது.

நெல்லை மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இவற்றை உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கையாளுவதால் துப்புரவு பணியாளர்களுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், நவம்பர் மாதம் 12-ஆம் தேதி கேரளாவில் இருந்து செங்கோட்டை வழியாக புளியங்குடி கிராமத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன.மேலும் நவம்பர் 21-ஆம் தேதி , 27 லாரிகளில் நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இவ்வாறு திறந்தவெளியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவது மருத்துவம் மேம்படுத்துதல் மற்றும் கையாளுதல் விதிகளுக்கு எதிராக உள்ளது.

எனவே கேரள மருத்துவ கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற உத்தரவிட வேண்டும் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த நீதிமன்றம் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு இன்றைக்கு ஒத்துவைத்திருந்தனர். இதனையடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நெல்லையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தர நெல்லை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment