Tamil Sanjikai

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான பால்பாண்டி என்பவர், முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. பிரபல ரவுடியான இவர் மீது மதுரை மாநகரில் பல்வேறு காவல்நிலையங்களில், ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் தெற்கு வாசல் பகுதியில் பால்பாண்டி நடந்து சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பால்பாண்டியை விரட்டி சென்றனர்.

அப்போது உயிருக்கு பயந்து அருகில் இருந்த பழைய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் புகுந்த பால்பாண்டியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்குவாசல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

0 Comments

Write A Comment