Tamil Sanjikai

சென்னை புளியந்தோப்பில் முன் விரோதம் காரணமாக ரவுடியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்த ரவுடி குமரன். இவர் புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூதாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ரவுடி கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் குமரனை சரமாரியாகத் தாக்கினர். தப்பி ஓடிய ரவுடி குமரனை விடாமல் துரத்திச் சென்று வெட்டி படுகொலை செய்துவிட்டு அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார் குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் குமரன், கொலைகளை செய்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த ரவுடியான அப்பு சொன்னதன் பேரில் தான் தாம் கொலை செய்ததாகக் கூறி வந்ததாகவும், இதுகுறித்து கேட்ட போது, அனைவரின் முன்னிலையிலும் ரவுடி அப்புவின் சட்டையைக் கிழித்து குமரன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதை அவமதிப்பாகக் கருதிய ரவுடி அப்பு, தமது கூட்டாளிகளுடன் நேற்று டோபிகானா சென்று அங்கு சூதாடிக் கொண்டிருந்த குமரனை விரட்டி விரட்டி தாக்கி கொன்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஐதர் என்கிற அப்பு, அபினேஷ், தேவேந்திரன், நரேந்திரன், பிரவின், பவித்ரன் ஆகிய 6 பேரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment