Tamil Sanjikai

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு தொழில் செய்து வந்த போலி டாக்டர் தம்பதிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் போலி டாக்டர்கள் கருக்கலைப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதாக அம்மாவட்ட எஸ்.பிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது சந்தேகத்தின் பேரில் திருவண்ணாமலை கோவில் அருகில் உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றில் சோதனை நடத்தினார். அப்போது, அங்கிருந்த பெண் ஒருவரிடம் விசாரித்ததில் அவர் கருக்கலைப்பு செய்ய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து கடை உரிமையாளரை விசாரித்ததில், அவர் பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்தது. அந்த கடையின் உரிமையாளர் கவிதா என்ற பெண்ணும், அவரது கணவர் பிரபுவும் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலை செய்து வந்துள்ளனர். கவிதா பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன், அங்கிருந்து ஏராளமான மருத்துவ உபகரண பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பேன்சி ஸ்டோருக்கு சீல் வைக்கப்பட்டது. கவிதா மற்றும் பிரபு ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இருவர் மீதும் கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளனர். இவர்கள் சுமார் 4,000 பேருக்கு கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment