Tamil Sanjikai

தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

சுழன்று அடித்த கஜா புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு 30 ஆயிரமும், ஆடுகளுக்கு 3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கஜா புயலால் சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின் கம்பங்கள் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளதால் மின் கம்பங்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மின் சீரமைப்பு பணிக்கு ஆந்திரா,கேரளா உள்ளிட்ட வெளி மாநில மின் வாரிய ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மின் சீரமைப்பு பணிகளுக்கு இதுவரை 1,000 வெளிமாநில பணியாளர்கள் வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment