Tamil Sanjikai

வாகன விபத்தில், சம்பவ இடத்திலேயே மனைவி இழந்து , பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் உயிருக்கு உயிரான மகள். உலகமே இருண்டது போன்ற அந்த ரணமான சூழலில், ஒரு தந்தையால் என்ன செய்துவிட முடியும்?

கோவையைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ்.... உயிருக்குப் போராடிக்கொண்டிரும் தனது மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்துக்குக் காரணமான டாஸ்மாக்கை மூடச்சொல்லி, தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். டாக்டரான இவர் இயற்கை ஆர்வலர், தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பல்வேறு தளங்களில் பணியாற்றியவர். எளிய மக்களுக்குச் சேவை செய்வதையே வாழ்வின் முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தவர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான நபர். இவருடைய மகள் சாந்தலா ஆனைகட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளியிலிருந்து சாந்தலாயை அழைத்து வருவதற்காக ரமேஷின் மனைவி ஷோபனா ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

மகளை அழைத்துக்கொண்டு ஜம்புகண்டிக்கு அருகில் ஷோபனா வந்துகொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் அசுர வேகத்தில் வந்த பைக் ஓன்று ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், ஷோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சாந்தலா பலத்த அடியோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்த அதிர்ச்சி தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பதறிக்கொண்டு வந்த டாக்டர் ரமேஷ், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டார். பின்னர், தனது மனைவியின் உடலைப் பார்த்து கண்ணீர் மல்கக் கதறி அழுத ரமேஷ், மனைவியின் சடலத்தோடு அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டத்தில் குதித்துவிட்டார்.

ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது குடித்துவிட்டு வருபவர்களால் அந்தப் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடந்து வருவதாக அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு. ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதிய ஆனைகட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் குடிபோதையில் இருந்ததாகவும், போதைதான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்றும், அந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனக்கூறி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார் டாக்டர் ரமேஷ்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை வடக்கு பகுதி தாசில்தார், துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி ஆகியோர் போராட்டம் நடத்திய ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர் அதன் பிறகே, தனது போராட்டத்தைக் கைவிட்டார் டாக்டர் ரமேஷ். அவருடைய மகள் சாந்தலா கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஷோபனா மரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இயற்கையின் மீதான தீராத காதல் கொண்ட மருத்துவர் ரமேஷ் இது சம்பந்தமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். நேற்று தன் மனைவி இறந்த நிலையிலும் கூட , டாஸ்மாக்கிற்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தின் துயரத்தை அரசாங்கம் உணருமா?.

0 Comments

Write A Comment