Tamil Sanjikai

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 5.30 மணிக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருடன் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அலையன்ஸ் ஏர் விமானம் மூலம் திருச்சி சென்ற அவர்களை, அம்மாவட்ட ஆட்சியர் செல்ல ராசாமணி வரவேற்றார்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து, ஆட்சியர் செல்ல ராசாமணியிடம் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், பின்னர் அங்கிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியதும், அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், மாப்பிள்ளையார்குளம் பகுதியில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

புதுக்கோட்டையின் மச்சுவாடியில் இருந்து ஆய்வை தொடங்கிய முதல்வர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறார். பின்னர் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். பின்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்க உள்ளார்.

0 Comments

Write A Comment