Tamil Sanjikai

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ், சமூக நலத்துறை செயலாளர் மதுமதி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உட்பட 25 அதிகாரிகள் பங்கேற்றனர்.

காலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரியலூர், சென்னை, கோவை, கடலூர் ,தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

பிற்பகலில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் , சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்கள், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது? அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தகவல்களை தலைமைச் செயலாளர் சண்முகம் கேட்டறிந்தார். மேலும் டெங்கு பாதிப்பு அறிகுறி என அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் கேட்டறிந்தார்.

மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்டங்கள் இந்த ஆய்வு பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment