Tamil Sanjikai

தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள குட்கா ஊழல் வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு குட்கா விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்திருந்தது, ஆனாலும் தமிழகத்தில் பல பெட்டி கடைகளில் குட்கா விற்பனை தொடர்ந்து நடைபெற்று தான் வந்தது அதற்கு காரணம் அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ-யின் 2-வது கட்ட விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குட்கா ஊழல் நடந்த காலகட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா மற்றும் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 15ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வரும் ஜனவரி மாதம் காவல் துறை உயர் அதிகாரிகளை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் குட்கா ஊழல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

0 Comments

Write A Comment