Tamil Sanjikai

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும், மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும், 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 30-ம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் இதனை அறிவித்தார்.

அதன்படி தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கால தாமதமாக வருவதை தடுக்க பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கிறது. 3,688 உயர்நிலைப்பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment