Tamil Sanjikai

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. முதல்நாளிலேயே இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் காத்திருந்து பதிவுசெய்துகொண்டனர்.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீர்ர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கும் பணி அலங்காநல்லூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கியது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் ஒவ்வொருவராக காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டனர்.

18 வயதுக்கு மேற்பட்ட, 40 வயதுக்குட்பட்டவர்கள் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்களை நிரப்பி, ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகளுடன், புகைப்படம் ஒட்டப்பட்ட விண்ணப்பங்களுடன் வரிசையில் காத்திருந்தனர். காவலர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து அனுப்பிய பின்னர் அவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை நடத்தி, போட்டியில் பங்கேற்க தேர்வுபெற்றவர்கள் என முதல்கட்ட சான்றளித்தனர்.

இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து, 155 சென்டிமீட்டர் உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருக்கிறதா எனவும், மது அருந்தியிருக்ககூடாது, அறுவை சிகிச்சைகள் இன்றி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்கிட்ட அடிப்படை சோதனைகளில் தேர்ச்சி போட்டவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

5 பேர் வீதம் 10 மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவப் பரிசோதனை சான்று மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், இன்று தேர்வு செய்யப்பட்டவர்கள் போட்டி நடைபெறும் நாளில் மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே களத்தில் இறங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment