Tamil Sanjikai

“சந்திரயான்-2 விண்கல திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் ஆர்பிட்டர் ஓராண்டுக்கு செயல்பட திட்டமிட்டிருந்தாலும் மேலும் 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு உள்ளது” என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 7-ந் தேதியன்று திட்டமிட்டபடி நிலவின் தென்துருவ பகுதியில் மெல்ல தரை இறங்க முடியாமல் போய்விட்டது. அதன் தகவல் தொடர்பு எதிர்பாராத வகையில் துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் 14 நாட்கள் என்ற நிலையில், மீண்டும் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா ஆகியவற்றின் விஞ்ஞானிகள் பெரு முயற்சி மேற்கொண்டனர்.

அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் நேற்று முடிந்து விட்டது.

இந்த நிலையில் ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த இஸ்ரோ தலைவர் கே.சிவன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “சந்திரயான்-2 விண்கலம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி நாங்கள் கூறுவதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று அறிவியல், மற்றொன்று தொழில்நுட்பம். தொழில்நுட்பத்தை காட்டுவதில், வெற்றி சதவீதம் கிட்டத்தட்ட முழுமையானது” என குறிப்பிட்டார்.

எதிர்கால திட்டம் பற்றி கே.சிவன் குறிப்பிடுகையில், “எதிர்கால திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த ஆண்டு விண்வெளிக்கு ஆளில்லா திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கிறோம். முதலில், விக்ரம் லேண்டருக்கு சரியாக என்ன நேர்ந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது” என்றார்.

“விக்ரம் லேண்டரை பொறுத்தமட்டில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதின் காரணம் என்னவாக இருக்கும் என்பதை தேசிய அளவில் கல்வியாளர்களையும், இஸ்ரோ வல்லுனர்களையும் கொண்ட குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.

விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை என ஒப்புக்கொண்ட சிவன், “ஏதேனும் தரவுகள் கிடைத்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் பற்றியும் அவர் குறிப்பிட தவறவில்லை. இதுபற்றி அவர் கூறும்போது, “ஆரம்பத்தில் ஆர்பிட்டர் ஓராண்டுக்குத்தான் நிலவை சுற்றி வர திட்டமிட்டிருந்தோம். அது மேலும் 7½ ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்ற தகவலை வெளியிட்டார்.

மேலும், “முழு திருப்தியை தருகிற வகையில் ஆர்பிட்டர் தொடர்ந்து அறிவியல் சோதனைகளை செய்து வருகிறது. ஆர்பிட்டரில் 8 கருவிகள் உள்ளன. எதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தனவோ, அந்த நோக்கங்களை அவை சரியாக செய்து வருகின்றன” எனவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

0 Comments

Write A Comment