Tamil Sanjikai

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியில் நாளுக்குநாள் யானைகள் முகாமிடுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், 100க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனத்துக்கு விரட்டப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் ஒற்றை யானை உள்பட 7 யானைகள் போடூர் பகுதியில் முகாமிட்டிருந்தன. இந்நிலையில், தற்போது ஓசூர் வனப்பகுதிக்கு 25-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. நேற்று சினிகிரிப்பள்ளி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வந்த இந்த யானைகள் சான மாவு புளியந்தோப்பு பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு மேலும் யானைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த யானைகள் பல பிரிவுகளாக சுற்றி திரிந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. போடூரில் 17 யானைகளும், பேரண்டப்பள்ளியில் 7 யானைகளும், சானமாவில் 25 யானைகளும் சினிகிரிப்பள்ளியில் 25 யானைகளும் என 65-க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகியை அறுவடை செய்து வருகிறார்கள். இப்போது வந்துள்ள யானை கூட்டத்தில் பல குட்டி யானைகள் உள்ளது. ராகி அதிகளவு சத்து நிறைந்ததால், குட்டிகளுக்கு பால் கொடுப்பதற்காக யானைகள் அதிகளவில் ராகியை சாப்பிடுவதற்காக நவம்பர், டிசம்பர் மாதங்களில் வருவது வழக்கம்.

யானைகள் முகாமிட்டிருப்பதால் வனப்பகுதியை ஒட்டிய கிராம விவசாயிகள் கடும் பீதியில் உள்ளனர். இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சூளகிரியில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் உத்தனபள்ளி, தியானதுர்கம், நாயக்கன்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகிறது. தியானதுர்கம் கிராமத்தை சேர்ந்த சென்னபர்சப்பா என்ற விவசாயி நேற்றிரவு தனது விவசாய நிலத்தில் காவலில் இருந்து விட்டு பின்னர் இன்று அதிகாலை வீடு திரும்பி கொண்டிருந்தப்போது, அவ்வழியாக வந்த ஒற்றை யானை சென்னபர்சப்பாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த சென்னபர்சப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்தவர்கள் இதுகுறித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள், உறவினர்கள் சென்னபர்சப்பாவின் சடலத்தை எடுத்து செல்ல கூடாது என அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, யானையை விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மக்களுக்கு பேட்டரியுடன் கூடிய டார்ச்லைட், யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் வெடி மற்றும் உயிரிழப்பவர்களுக்கு உரிய இழப்பீடுகளை கொடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினார்கள்.

0 Comments

Write A Comment