Tamil Sanjikai

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 இளம்பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்கள் கலக்கத்தில் உள்ளனர்.

டிக்டாக் செயலி குறித்தும் அதில் பதிவிடப்படும் வீடியோக்கள் குறித்தும் பலமுறை விரிவாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் எச்சரித்தாலும் நம்ம ஊர் பெண்கள் சிலர் அதனை பெண்ணிய அடக்கு முறையாக நினைத்து காதில் போட்டுக் கொள்வது கிடையாது. இன்னும் ஒருபடி மேலே போய் சுடிதார் துப்பட்டாவைத் துறப்பதுதான் தங்கள் சுயமரியாதை என்றெல்லாம் புரட்சிக் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், டிக் டாக்கில் லைக்குகளை அள்ள வேண்டும், பிரபலம் ஆகவேண்டும் என்ற மோகத்தில் சிலர் துப்பாட்டாவை தியாகம் செய்து வீடியோ பதிவிட்ட பெண்கள் சிலரின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பரவ தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் டிக்டாக் அடிமைகளாக மாறி வீடியோ பதிவிடுவதையே பொழுதுபோக்காக செய்து வந்த பெண்களின் கவர்ச்சியான வீடியோக்கள் டிக்டாக்கில் இருந்து ஆபாச இணையதளங்களுக்கு கைமாறி இருப்பதுதான் அதிர்ச்சியான தகவல்.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 28 பெண்களின் டிக்டாக் வீடியோக்களை சிலர் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையறிந்த சம்பந்தப்பட்ட பெண்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து காவல்துறையினரை அணுகி ஆபாச இணையதளங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களில் மட்டும் 28 பேர் டிக்டாக் வீடியோக்களை நீக்கக் கோரி புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புகார் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆபாச இணையதளங்களில் அந்த வீடியோக்கள் நீக்கப்படுவதற்கு இன்னும் சில தினங்கள் ஆகும் என்பதால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பொழுதைக் கழித்தவர்கள் பெருங்கவலையில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.

காலம் காலமாக பெண்களை போகப்பொருளாகவே பார்த்து பழக்கப்பட்ட சில விஷக்கிருமிகளை கைகளில், பெண்களின் புகைப்படங்கள் கிடைத்தாலே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடும் இந்த காலத்தில், அவர்களுக்கு ஏற்ற முகபாவத்துடன் ஆடிப் பாடி வீடியோ வெளியிட்டால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!

0 Comments

Write A Comment