Tamil Sanjikai

சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பிரியாணி கடைகள் அளவுக்கு அதிகமாக பெருகி வந்துள்ளது. இப்படி தெருவுக்குத்தெரு முளைத்துள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சியின் தரம் பற்றி பலருக்கு தெரிவதில்லை. சிக்கன் பிரியாணியில் கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்படுவதாக முன்னர் பரபரப்பாக செய்திகள் வெளியானது.

பின்னர், மட்டன் பிரியாணி என்ற பெயரில் வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் செத்த ஆடுகளின் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்காக அனுப்பப்பட்ட பல ஆயிரம் கிலோ அளவிலான கெட்டுப்போன ஆட்டிறைச்சியை சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்த சம்பவம் தமிழகத்தில் நடந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட இந்த நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்த, சென்னை நகர போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment