Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 27-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தனது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கருணாரத்னே 1 ரன்னிலும், குசல் பெரேரா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ, சற்றும் மனம் தளாராமல் ஆடிய ஆட்டமும், அவருடன் சேர்ந்த குசல் மென்டிஸ் ஆடிய மிக பொறுமையான ஆட்டமும் ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை அளித்தது. ஆனால் இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அவ்வபோது சில பந்துகளை எல்லை கோட்டுக்கு அனுப்பிய அவிஷ்கா பெர்னாண்டோ 49 ரன்களில் கேட்ச் ஆக, அதன் பின் மேத்யூஸ், குசல் மென்டிஸ் உடன் கைக்கோர்க அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.

நிதான ஆட்டத்தின் மூலம் ஓரளவு ரன் சேர்த்த குசல் மென்டிஸ் 46 ரன்களில் வெளியேறினார் , அடுத்த பந்திலேயே ஜீவன் மென்டிஸ் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் மேத்யூஸ் சேர்ந்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். தனஞ்ஜெயா டி சில்வா 29 ரன்னிலும், திசரா பெரேரா 2 ரன்னிலும், இசுரு உதனா 6 ரன்னிலும், மலிங்கா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.. தனது அரைசதத்தை பதிவு செய்து கடைசிவரை போராடிய மேத்யூஸ் 85 ரன்களுடனும், நுவான் பிரதீப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியில், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்கவுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அடில் ரஷித் 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் 14 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து ஜோடி சேர்ந்த ஜோரூட் மற்றும் மோர்கன் ஓரளவு அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் சிறிது ரன் சேர்த்த மோர்கன் 21 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்த வந்த பென் ஸ்டோக்ஸ், ஜோரூட் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.

இதில் தனது அரைசதத்தை பதிவு செய்த ஜோரூட் 57 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து ஜோஸ் பட்லர் 10 ரன்னிலும், மொயீன் அலி 16 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 2 ரன்னிலும், அடில் ரஷித் 1 ரன்னிலும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 ரன்னிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை மட்டுமே எடுத்து. அதிர்ச்சி தோல்வி . தனது அரைசதத்தை பதிவு செய்த பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை அணியில், மலிங்கா 4 விக்கெட்டுகளும், தனஞ்ஜெயா டி சில்வா 3 விக்கெட்டுகளும், இசுரு உதனா 2 விக்கெட்டுகளும், நுவான் பிரதீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

0 Comments

Write A Comment