Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 39-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்னே மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இரு ஆட்டக்காரர்களும் துவக்கம் முதலே இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் கருணாரத்னே 32(48) ரன்களில் கேட்ச் ஆக, அரைசதம் அடித்த குசல் பெரேரா 64(51) ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்து அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசல் மென்டிஸ் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இதில் குசல் மென்டிஸ் 39(41) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூஸ் 26(20) ரன்களில் போல்ட் ஆக, தொடர்ந்து பொறுப்பாக ஆடி தனது சதத்தினை பதிவு செய்து அசத்திய அவிஷ்கா பெர்னாண்டோ, 103 பந்துகளில் 104 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய இசுரு உதனா 3(6) ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தனஞ்ஜெயா டி சில்வா 6(3) ரன்னுடனும், திரிமன்னே 45(33) ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும், பாபியன் ஆலென், காட்ரெல் , ஒஷானே தாமஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கிறிஸ் கெயில் மற்றும் சுனில் அம்ரிஷ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சுனில் அம்ரிஷ் 5(6) ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5(11) ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிறிஸ் கெயில் 35(48) ரன்களும், ஹெட்மயர் 29(38) ரன்களும், ஜேசன் ஹொல்டர் 26(26) ரன்களும், பிரித்வெயிட் 8(15) ரன்னும் எடுத்து வெளியேறினர்.

இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக நிகோலஸ் பூரனுடன் ஆலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை கணிசமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ஆலன் 51(32) ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பூரன் 92 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன், காட்ரல் ஜோடி சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோலஸ் பூரன் 118(103) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தாமஸ் 1(6) ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் கேப்ரியல் 3(7) ரன்னும், காட்ரல் 7(10) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக லசித் மலிங்கா 3 விக்கெட்டுகளும், மேத்யூஸ், ரஜிதா மற்றும் வாண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

0 Comments

Write A Comment