Tamil Sanjikai

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஒற்றையர் போட்டியின் காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான கிடம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் கலந்துகொண்டு பலப்பரீட்சை நடத்தினர்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை Pornpawee Chochuwong-வை 21-7 மற்றும் 21-18 என்ற நேர் செட்கணக்கில் எதிராளியை எளிதில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் சாய்னா , சீன வீராங்கனையை எதிர்த்து விளையாட உள்ளார்.

இதேபோல மற்றொரு முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனையான கரோலின் மரினை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-11 என்று எளிதில் கைப்பற்றிய கரோலின் மரினுக்கு இரண்டாவது செட்டில் சிந்து கடும் போட்டியளித்தார். இருப்பினும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய மரின் இரண்டாவது செட்டையும் ( 21-12) தன்வசப்படுத்தி போட்டியை எளிதாக வென்றார்.

ஆண்கள் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் உள்ளூர் வீரரான ஜொனாதனை எதிர்கொண்டார். ஆசிய சாம்பியனான ஜொனாதன் 21-18, 21-19 என்ற நேர் செட்டில் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார். ஜொனாதனுக்கு ஸ்ரீகாந்தால் கடும் போட்டியளிக்க முடிந்ததே தவிர வெற்றி பெற இயலாமல் போனது.

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரே வீராங்கனையாக சாய்னா திகழ்கிறார், இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசிய மாஸ்டர்ஸ் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments

Write A Comment