சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, இனி பிரியாணி சாப்பிட அனுமதி இல்லை என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்த மிஸ்பா, அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணி சமீப காலமாக சரியாக எதிர்பார்த்த அளவு திறம்பட செயல்படாததால், வீரர்களை திருத்தும் நடவடிக்கையில் மிஸ்பா களம் இறங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து மிஸ்பா கூறியதாவது: "பாக்., வீரர்கள் உணவில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அவர்கள், பிரியாணியை சாப்பிட்டு சோம்பேறியாகிவிடுகின்றனர்.
அவர்களுக்கான சாப்பாட்டில் இனி பிரியாணியோ, எண்ணெய் மிகுந்த பதார்த்தங்களோ இருக்காது. சத்து நிறைந்த தானியங்கள், பழங்கள், நன்கு சமைக்கப்பட்ட அசைவ உணவுகள், கொழுப்பை கரைக்கும் உணவு வகைகளே வழங்கப்படும். இது தொடர்பாக, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என அவர் கூறினார்.
0 Comments