Tamil Sanjikai

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடந்த மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடரின்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த போட்டியில், முன்னணி வீராங்கனையான மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. அவரை அணியில் சேர்த்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று முன்னாள் வீரர், வீராங்கனைகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடம் தனித்தனியாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. பிசிசிஐயின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மற்றும் மேலாளர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோரை நேரில் சந்தித்து இருவரும் தங்களுடைய விளக்கத்தை அளித்தனர்.

இந்நிலையில் மிதாலி ராஜை நீக்கிய விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினரும், மகளிர் அணியின் முன்னாள் உறுப்பினருமான டயானா எடுல்ஜி ஆகியோர் தமக்கு எதிராக பாரபட்சகமாக நடந்துகொள்வதாகவும், தமது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க முயல்வதாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலி ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தாம் சேர்த்துக்கொள்ளப்படாதது குறித்து தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாக பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியைத் தழுவியது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் தாம் பயிற்சியில் ஈடுபடும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது, அவருடன் பேசச் செல்லும்போது செல்பேசி திரையை பார்த்துக்கொண்டு தம்முடன் பேசாமல் செல்வது போன்ற அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதாக மிதாலி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment