Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், 12வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 5ஆம் தேதி முதல் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

முதலில் இந்த 10 அணிகளும், மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் லீக் போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து, முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் இடையே அரையிறுதிப் போட்டி நடைபெறும். அதில் இருந்து இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் மோதும். அதன்படி, ஜூலை 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அரையிறுதி போட்டிகளும், ஜூலை 14ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.

விராட் கோலி கேப்டனாக விளையாடும் முதல் உலக கோப்பை போட்டி இதுவாகும். அதே நேரத்தில் வீரராக கோலிக்கு இது மூன்றாவது உலகக்கோப்பை போட்டியாகும்.

0 Comments

Write A Comment