இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி கிடையாது!
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 21 முதல், ஜனவரி 18 வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரியப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யஉள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய 2 பேர் கொண்ட குழு ஆஸ்திரேலியாவுக்கு போய் உள்ளது.
அங்கு சென்றுள்ள அவர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்திய வீரர்கள் தற்போது உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக உள்ளனர். கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு சுவையற்றதாக இருந்ததை தற்போது சுட்டிக்காட்டி பேசியுள்ளனர். இந்திய வீரர்களில் சிலர் சைவ உணவை மட்டுமே உண்பவர்கள். எனவே இந்திய வீரர்களுக்கான உணவு பட்டியலில் மாட்டிறைச்சி இடம் பெற வேண்டாம் என தெரியப்படுத்திள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தை தொடர்பு கொண்டு இந்திய வீரர்களுக்கு தேவையான உணவு வகைகளை விநியோகிக்கும்படியும் அந்த குழு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பி.சி.சி.ஐ.,யின் ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு குறித்த புகைப்படம் வெளியானது. மதிய உணவில் மாட்டிறைச்சியும் இடம் பெற்று இருந்தது.
0 Comments