Tamil Sanjikai

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 2(3) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா 18(34) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 20(35) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

பின்னர் இந்த ஜோடியில் விராட் கோலி 120(125) ரன்களில் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யருடன், கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 71(68) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேதர் ஜாதவ் 16(14) ரன்களும், அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 1(2) ரன்னும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16(16) ரன்களும், முகமது ஷமி 3(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக , கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோரில் கிறிஸ் கெய்ல் 11(24) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5(10) ரன்னில் வெளியேறினார். பின்னர் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இவின் லீவிஸ் மற்றும் ஹெட்மயர் ஜோடியில், ஹெட்மயர் 18(20) ரன்களில் கேட்ச் ஆனார்.

தொடர்ந்து தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவின் லீவிஸ் தனது அரை சதத்தை பதிவு செய்த நிலையில் 65(80) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நிகோலஸ் பூரன் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோலஸ் பூரன் 42(52) ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 18(23) ரன்களும், பிராத்வெய்ட் (0) , கெமார் ரோச் (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், ஷெல்டன் காட்ரெல் 17(18) ரன்களும், தாமஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் கேப்டன் ஹோல்டர் 13(19) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 42 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில், சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஹமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா மற்றும் கலீல் அஹமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

0 Comments

Write A Comment