Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 40-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இருவரும் இணைந்து திறம்பட ஆடி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.

ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா கொடுத்த கேட்சினை வங்காளதேச அணி நழுவவிட்டது. இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி, தனது தனித்துவமான ஆட்டத்தின் மூலம் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசித் தள்ளி ரோகித் சர்மா இந்த தொடரில் 4-வது சதத்தினை பதிவு செய்தார் . உலக கோப்பை தொடரில் இலங்கை அணியின் சங்கக்கரா சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா 92 பந்துகளில் 104 ரன்கள் ( 5 சிக்ஸர், 7 பவுண்டரி) குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்த கே,எல் ராகுல் 77(92) ரன்களில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட்கோலி 26(27) ரன்களில் கேட்ச் ஆக, அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா (0) றன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார் . அடுத்ததாக அதிரடி காட்டிய ரிஷாப் பண்ட் 48(41) ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 8(9) ரன்னிலும், டோனி 35(33) ரன்களிலும், புவனேஷ்வர் குமார் 2(3) ரன்னிலும், முகமது ஷமி 1(2) ரன்னும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பும்ரா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களை எடுத்தது. வங்காளதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக, முஸ்தாபிஜூர் ரகுமான் 5 விக்கெட்டுகளும், சவுமியா சர்கார், ருபெல் ஹூசைன், ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்காளதேச அணியின் சார்பில், தமிம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் தமிம் இக்பால் 22(31) ரன்களும், அடுத்ததாக ஒரளவு ரன் சேர்த்த சவுமியா சர்கார் 33(38) ரன்களும், முஷிபூர் ரஹிம் 24(23) ரன்களும், லிட்டன் தாஸ் 22(24) ரன்களும், ஹொசைன் 3(7) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் பதிவு செய்த ஷாகிப் அல்-ஹசன் 66(74) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக சபீர் ரஹ்மானுடன், முகமது சைபுதீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் சீராக உயர்ந்தது. அப்போது அந்த ஜோடியில் சபீர் ரஹ்மான் 36(36) ரன்களில் பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் முஷ்ரப் மோர்டசா 8(5) ரன்னும், ரூபெல் ஹுசைன் 9(11) ரன்னும் முஷிபூர் ரஹிம் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினார்.

இறுதியில் தனிநபராக போரடிய முகமது சைபுதீன் 51(38) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வங்காள தேச அணி 48 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், முகமது சமி மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

0 Comments

Write A Comment