Tamil Sanjikai

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் இரு அணிகளின் வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் நிறம் ஏறக்குறைய ஒன்றாக இருக்கும்பட்சத்தில், களத்தில் விளையாடும் அணி வீரர்களை அடையாளம் காண்பதில் ரசிகர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க ஐசிசி போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வீரர்களுக்கு மாற்று உடைகளை ஐசிசி தற்போது ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணிக்கு, கருநீலம் மற்றும் ஆரஞ்ச் நிறம் கலந்த மாற்று உடை (ஜெர்சி) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின்படி, இந்த ஜெர்சி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் உள்ள ஆரஞ்ச் நிறம், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் பழைய ஜெர்சியிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளதாகவும் ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிராக வரும் 30 -ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில், இந்திய அணி வீரர்கள் வழக்கமாக அணியும் நீலநிற ஜெர்சிக்கு மாற்றாக, ஆரஞ்ச் நிற புதிய ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளின் வீரர்கள் அணியும் ஜெர்சியின் அடிப்படை நிறம் நீலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நாம் ஏற்கெனவே சொன்னதை போன்றே, இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆரஞ்ச் நிறத்தில் ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் மூலம், மத்திய பாஜக அரசு விளையாட்டிலும் காவிமயத்தை புகுத்த முயன்றுள்ளது என்று அக்கட்சியினர் குற்றம்சாற்றியுள்ளார்.

0 Comments

Write A Comment