Tamil Sanjikai

இந்தியாவிற்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதிய முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ராகுல் 36 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். கோலி 24 ரன்களும், தோனி ஆட்டமிழக்காமல் 29 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆர்க்கி ஷார்ட் 37 ரன்கள் எடுத்தார். ஸ்டோனிஸ், பின்ச் ஆகியோர் சொதப்பினாலும், அடுத்து வந்த மாக்ஸ்வெல் 56 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ரிச்சர்ட்சன்- கம்மின்ஸ் இருவரும் பொறுப்புடன் ஆடி ஓவரின் கடைசி பந்தில் தங்கள் அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

0 Comments

Write A Comment