Tamil Sanjikai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தை அடுத்த செனாய் நகர், ஜெயலட்சுமி காலனியை சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் (29) நீச்சல் வீரரான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது உறவினரை பார்த்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கலவை ஏற்றிச் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், லாரி ஓட்டுநர் சுப்பிரமணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சாலை விபத்தில் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment