Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தது. அதற்கு அம்பத்தி ராயுடு ஏற்கனவே வெளிப்படையாக தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகிய போதிலும் மாற்று வீரர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும் அம்பத்தி ராயுடுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காததால் அம்பத்தி ராயுடு அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு திடீரென அறிவித்துள்ளார்.

காயத்தால் ஷகிர் தவான், விஜய் சங்கர் விலகிய போதிலும் வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் அம்பத்தி ராயுடு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அம்பத்தி ராயுடு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் நாட்டு அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாட வந்தால் அவருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க தயார் என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு டுவிட்டர் மூலம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment