Tamil Sanjikai

ஒரு கிரிக்கெட் மேட்சில் ஒண்ணு அல்லது ரெண்டு பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் "டக் -அவுட்" ஆவதை பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு அணியின் 10 பேட்ஸ்மேன்களும் "டக் -அவுட்" ஆன கொடுமை, கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான 19 வயதிற்குட்பட்ட பெண்கள் அணிக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில், காசர்கோடு அணியும், வயநாடு அணியும் இன்று மோதின.

டாஸ் வென்ற காசர்கோடு அணி கேப்டன் அக்ஷதா, தமது அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதிக ரன்கள் எடுத்து, எதிரணி வெற்றிபெற கடினமான இலக்கை நிர்ணயிக்கும் எண்ணத்தில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறாக, காசர்கோடு அணியின் 10 பேட்ஸ்மேன்களும், ஒருவர் பின் ஒருவராக சொல்லிவைத்தாற்போல் ரன் எதுவும் எடுக்காமல் "டக் -அவுட்" ஆகி, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதில் கொடுமை என்னவென்றால் 10 விக்கெட்டுகளுமே "கிளீன் -போல்ட்"டாகி வெளியேறியது தான்.

விக்கெட்டின் எதிர்முனையில் நின்றுக் கொண்டிருந்த காரணத்தால் ஒரேயொரு பேட்ஸ்மேன் மட்டும் அவுட் - ஆகாமல் தப்பித்தார். அவரும் ரன் எதுவும் எடுக்கவில்லை. எதிரணி பந்து வீச்சாளர்கள் சில வயிட், நோ-பால் வீசியதால், அவர்களின் கருணையில் காசர்கோடு அணி 4 ரன்களை எடுத்தது.

5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வயநாடு அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், முதல் ஓவரிலேயே 5 ரன்களை எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.

காசர்கோடு அணியின் மோசமான இந்த ஆட்டம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலத்துக்கு நினைவுக்கூரப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

0 Comments

Write A Comment