Tamil Sanjikai

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி,  மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பையே வழங்கியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை காரணம் ஏதுமின்றி சுப்ரீம் கோர்ட்டு அவரை மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த புதிய நீதிபதி சத்யநாராயணன், கடந்த மாதம் ஜூலை 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.

அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை கடந்த மாதம் ஆகஸ்டு 31-ம் தேதி நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தவண்ணம், நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். அப்போது, இதற்கு முன்பு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பை பரிசீலிக்கவில்லை என்றும், தான் தனியாக ஒரு தீர்ப்பை வழங்குவதாகவும் கூறினார்.

அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றும், தகுதிநீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment