Tamil Sanjikai

தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7-ஆம் தேதி பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மாயாவதி, முஸ்லிம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை சிதற விடாமல் மெகா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 9-ஆம் தேதி யோகி ஆதித்யநாத் ஒரு கூட்டத்தில் பேசுகையில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளதாகவும், தங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

சாதி மதம் சார்ந்த பேச்சுகளை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த தடை உள்ள நிலையில் இரு தலைவர்களும் பேசிய பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இருவருக்கும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் பொதுநல வழக்கொன்றின் பேரில் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணி முதல் 72 மணி நேரத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நாளை காலை முதல் 48 மணி நேரத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment