Tamil Sanjikai

திமுக கூட்டணியில் காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் மட்டுமே இருப்பதாக அதன் பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்த நிலையில், தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா? என்பதை ஸ்டாலின் தான் கூற வேண்டும் என வைகோ தெரிவித்திருந்த நிலையில், மதிமுக சார்பில் நடைபெறவிருக்கும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தநிலையில், திமுக தலைமையிலான அணியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாயலத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஸ்டாலின் தோழமை கட்சிகளோடு இணக்கமாக உள்ளதாக தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாயலத்தில் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகனும் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தேன், அதற்கும் தேர்தல் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. ஸ்டாலின் தோழமை கட்சிகளை இணக்கமாக நடத்தி வருகிறார். அதில் எவ்வித சிக்கலும் இல்லை. அதேநேரத்தில், மத்தியில் ஆளும் பாஜக, திமுக அணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்தார். ஸ்டாலின், திருமாவளவன் சந்திப்புக்குப் பிறகு திமுக கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment