Tamil Sanjikai

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு தங்களிடம் 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது. இதனால் மராட்டிய மாநிலத்தில், அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனகூறப்பட்டது. தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத்பவார், நேற்று டெல்லியில் காங்கிரசின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆதரிக்க சோனியா காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சோனியாவுடனா சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த சரத்பவார்,

சிவசேனா-பாஜக மோதல் என்பது அவர்களது கூட்டணியின் உள்விவகாரம், சிவசேனா எங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. ஆட்சி அமைக்க எங்களிடம் தேவையான எம்எல்ஏக்கள் இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாராக இருக்கிறோம் என கூறினார்.

0 Comments

Write A Comment