Tamil Sanjikai

அக்டோபர் 21 ம் தேதி நடந்த மராட்டிய மாநிலம் மற்றும் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல்காந்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதாகக் கூறியதுடன், கட்சியும் அவரை ஒரு நட்சத்திர பிரச்சாரகராக பட்டியலிட்டுள்ளது.

ஆனால் 2017 ல் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கார் சட்டமன்றத் தேர்தல்களைப் போல் இல்லாமல் இந்த மராட்டிய- அரியானா சட்டமன்ற தேர்தல்களில் ராகுல்காந்தி அக்கறை காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கம்போடியாவில் தியான முகாமில் கலந்து கொள்ள நான்கு நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் வட்டாரங்களில் இது குறித்து இரண்டு விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஒன்று காங்கிரஸ் இரு மாநிலங்களையும் இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு தான் காரணமல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறார். இரண்டு, கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியின் தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அவர்கள் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

ஆகஸ்ட் 10 ம் தேதி சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பு ஏற்றதில் இருந்து பல இளம் தலைவர்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

ராகுல்காந்தியுடன் நெருக்கமாக இருந்த சில தலைவர்கள் கட்சியில் இருந்து சமீப காலமாக காங்கிரசை விட்டு வெளியேறி விட்டனர்.

கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அரியானா காங்கிரஸின் முன்னாள் தலைவர் அசோக் தன்வார், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில்

கடந்த ஒன்றரை தசாப்தத்தில் ராகுல் காந்தியால் வளர்க்கப்பட்ட இளம் தலைவர்கள் அனைவரையும் ஒழிக்க சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த சதிக்கு பலியானவர்கள் எழுந்து நிற்க தைரியம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த தாக்குதலை எதிர்ப்பது மற்றும் அம்பலப்படுத்துவது எனது தார்மீக கடமை என்று நான் நினைக்கிறேன் என கூறி உள்ளார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகளை மும்பை முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், முன்னாள் ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் அஜய் குமார், ( இவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து உள்ளார்).முன்னாள் திரிபுரா காங்கிரஸ் தலைவர் பிரதியோத் தேவ் பர்மன், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் ஒரு ஒப்பந்தத்திற்குப் பிறகு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரும் வைத்து உள்ளனர்.

இருந்தாலும் கட்சி, வேறுபாடுகளை மறந்து தலைவர்கள் கட்சிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளது.

0 Comments

Write A Comment