Tamil Sanjikai

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

கடந்த ஓராண்டாக #JustAsking ஹாஷ்டேக்கில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை கேள்வி கேட்டு வந்தார் பிரகாஷ் ராஜ்.

இன்று அவர் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், 'தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஒரு தொகுதியில் களமிறங்க போவதாகவும் , எந்த தொகுதி என்று விரைவில் அறிவிப்பதாகவும் ' கூறி இருக்கிறார்.

கமல் அரசியல் பிரவேசம் குறித்து பிரகாஷ்ராஜ் முன்பு ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமக்கு அரசியலுக்கு வர விருப்பம் இல்லை என்று கூறி இருந்தார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் அப்போது கூறி இருந்தார்.

2017ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விளக்கி இருந்தார், அதில் அவர், "நடிகர்கள் தங்களின் பிரபலத்தின் காரணமாக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. அது மிகப்பெரிய பேரழிவாக இருக்கும். அவர்களுக்கு, இந்த நாடு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து சரியான புரிதல் இருக்க வேண்டும் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். நாமும் வெறும் ரசிகர்களாக மட்டும் வாக்களிக்க கூடாது. ஒரு பொறுப்பான குடிமகனாக வாக்களிக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.

0 Comments

Write A Comment