Tamil Sanjikai

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து, ஜம்முவை தனி மாநிலமாக அறிவிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருவதால், நாடு முழுவது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கி, அமைதியை நிலைநிறுத்தும் முயற்சியில், தற்போது உள்ள மத்தியில் ஆளும் அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 10 ஆயிரம் துணை ராணுவப்படையினர், கடந்த வாரம் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போதே, அங்கு பதற்றம் மூண்டது. மத்திய அரசின் செயலுக்கு, அங்குள்ள மாநில கட்சிகள் மற்றும் பிரிவினைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக தொடரும் காஷ்மீர் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. தற்போது மேலும் 28 ஆயிரம் வீரார்கள் அங்கு களம் இறக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையால், செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து, ஜம்முவை புதிய மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே, அமர்நாத் யாத்ரிகர்களை அவசர அவசரமாக ஊர் திரும்பும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி, காஷ்மீரில் நம் தேசிய கோடியை ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அங்கு நடைமுறையில் உள்ள அந்த மாநிலத்திற்கான தனி கொடி முறையையும் முடிவுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மாநில பிரிப்பு நடவடிக்கை குறித்து அரசு சார்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

0 Comments

Write A Comment