Tamil Sanjikai

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக இது குறித்து ரஷ்யா நாட்டின் ஏற்பாட்டின் படி மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்துக் கொள்ள இருக்கிறது. ரஷ்யா நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ம் தேதி இந்த பேச்சுவார்த்தைக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் நாடு திடீரென விலகியதால், அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தற்போது 2-வது முறையாக ஏற்பாடு செய்துள்ளது. இதில் தலிபான் தீவிரவாத அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.

இதுதவிர, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அமெரிக்கா மற்றும் சில நாடுகளுக்கும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ”பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளும். ஆப்கானிஸ்தானில் அமைதி, சீரமைப்பு மேற்கொள்ள எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லிக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின்- நரேந்திர மோடி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் ரஷ்யா மேற்கொள்ளும் அமைதி முயற்சிக்கு இந்தியா ஒத்துழைக்கும் என உறுதி அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

0 Comments

Write A Comment