Tamil Sanjikai

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது என்று, கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

முதல்வரின் பேட்டியில் மேலும், ‘இடைத்தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நல திட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் தான் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடவில்லை. பொய்களைச் சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. குடிமராமத்து போன்ற சிறப்பு வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலம் என விருது பெறும் அளவிற்கு தமிழகம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில் தமிழக அரசு தலையிட முடியாது’ என்றார்.

மேலும், ‘டெங்குவை ஒழிக்க பொதுமக்கள் தாங்களாக முன்வந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசுடன் சேர்ந்து மக்களும் உதவ வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Comments

Write A Comment