ஆதித்ய தாக்கரே! - மராட்டிய மாநில தேர்தல் அரசியலில் சிங்கக்குட்டியாக புறப்பட்டிருக்கிறார், இந்த இளம் தலைவர்.
1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி பால் தாக்கரேயால் தொடங்கப்பட்ட காலம் தொட்டு, இன்று வரை மராட்டிய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக சிவசேனா இருந்து வருகிறது.
‘மண்ணின் மைந்தர்’ என்ற கொள்கைதான், இன்னும் சிவசேனாவின் பலமாக இருக்கிறது. அந்த கட்சியை தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பதும் அந்த கொள்கைதான்.
என்ன, 53 ஆண்டு கால சிவசேனாவின் அரசியல் பயணத்தில் இதுவரை பால் தாக்கரே குடும்பத்தினர் யாருமே தேர்தல் அரசியலில் களம் இறங்கியது இல்லை. எந்த ஆட்சிப்பதவியிலும் அமர்ந்தது இல்லை.
மனோகர் ஜோஷியையும், அவரை தொடர்ந்து நாராயண் ரானேயையும் மராட்டிய மாநில முதல்-மந்திரி நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த கட்சி, சிவசேனா.
மனோகர் ஜோஷியை நாடாளுமன்ற சபாநாயகர் பதவியிலும் அமர வைத்தது, சிவசேனா.
மனோகர் ஜோஷி, ஆனந்த்ராவ் விதோபா அத்சுல், சுரேஷ் பிரபு, ஆனந்த் கீதே, அரவிந்த் சவந்த் ஆகியோரை மத்திய மந்திரி பதவியில் அமர வைத்தும் அழகு பார்த்திருக்கிறது சிவசேனா.
ஆனால் பால் தாக்கரேயும் சரி, அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் சரி தேர்தலில் போட்டியிட விரும்பியது இல்லை. இப்போதுதான் முதன்முதலாக மூன்றாம் தலைமுறை தலைவராக, சிவசேனாவின் இளைஞர் அணியாக திகழ்கிற யுவசேனாவின் தலைவராக இருக்கிற ஆதித்ய தாக்கரே மராட்டிய சட்டசபை தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார்.
0 Comments