Tamil Sanjikai

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். திமுக, அதிமுக என இரு தரப்பினருடன் தங்கள் கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுவதே தவறு, மேலும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை.

தேமுதிகவினர் துரைமுருகனை சந்திக்கும் முன் வராத ஊடகத்தினர் சந்தித்த பின்னர் எப்படி வந்தனர்? சாதாரண விவகாரத்தை சூழ்ச்சி மூலமாக திமுக பூதாகரமாக்கி விட்டது. தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. விஜயகாந்த்துடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என ஸ்டாலின் முதலில் சொல்ல வேண்டும். திமுக தொகுதி பங்கீடு முடிந்து விட்டது என அறிவித்த பிறகு யாராவது கூட்டணி பேசுவார்களா? கலைஞர் உடல்நலம் இல்லாத போது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார். ஆனால் அப்போது ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை." இவ்வாறு அவர் கூறினார். .

0 Comments

Write A Comment