Tamil Sanjikai

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தே.மு.தி.க நிறுவனர், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பின் முதல்முறையாக இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்துக்கு வந்தார். அவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவிடம் இருந்து மக்களவை தேர்தலில் 5 இடங்களும், மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடமும் கேட்டுப் பெற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தே.மு.தி.க.வுக்கு எந்தெந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது? எந்தெந்தத் தொகுதிகளை கேட்டுப் பெறலாம்? உள்ளிட்டவை குறித்து விஜயகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விரைவில் அ.தி.மு.க.வுடன் முறைப்படி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment