Tamil Sanjikai

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் கடந்த 21ந்தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16ந்தேதி கைது செய்தது. தொடர்ந்து அவரது காவலை நீட்டிக்க கோரி கடந்த 24ந்தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை முறையீடு செய்தது.

இதன்படி, ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவலை வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ப. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ப. சிதம்பரத்தின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு செய்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

கபில் சிபல் வாதிடும் போது ப.சிதம்பரத்துக்கு உடல் அலர்ஜி நோய் மற்றும் வயிற்று வலி உள்ளது. உடல்நிலை பாதிப்பால் சிதம்பரத்தின் எடை 73 கிலோவில் இருந்து 66 கிலோவாக குறைந்துள்ளது . சிதம்பரம் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு முறையான சிகிச்சை தேவைப்படுகிறது. சிதம்பரத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர் ஐதராபாத் செல்ல 6 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார்.

எனினும் இந்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்து விட்டது. இதன்பின்பு நீதிபதி சுரேஷ் கெய்த், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரத்தின் மருத்துவ நிலை பற்றி அறிய மருத்துவ வாரியம் ஒன்றை அமைக்கும்படி எய்ம்ஸ் இயக்குனருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ப. சிதம்பரத்தின் மருத்துவ நிலை பற்றி ஆலோசனை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும்படியும் வாரியத்திற்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.

0 Comments

Write A Comment