Tamil Sanjikai

கடந்த 1986-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் சில அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் கடந்த 2005-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு அண்மையில் ஆய்வு செய்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே டெல்லி நீதிமன்றத்தில் போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் புதிய சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாக 2018 பிப்ரவரியில் சிபிஐ கோட்டை நாடியது. 2018 டிசம்பர் 4-ம் தேதி, மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள எங்களுடைய அனுமதி ஏன்? என கேள்வியை எழுப்பியது நீதிமன்றம். இந்நிலையில் சிபிஐ மனுவை திரும்ப பெற்றது. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதனை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment