Tamil Sanjikai

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மீதான முன்ஜாமின் மனுக்கள் இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க இன்று மறுப்பு தெரிவித்தது. பின்னர் வருகிற வெள்ளிக்கிழமை இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தங்களிடம் ஆலோசிக்காமல் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சிபிஐ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தனர். அதே நேரத்தில் சிதம்பரத்தின் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இறங்கினர். இன்று காலை முதல் சிதம்பரத்தை தேடி வந்த நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment